siddhannavasal_4


siddhannavasal_1
 புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.
அங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.
இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
siddhannavasal_2
முனிவர் நின்று பூ பறிப்பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.
siddhannavasal_3
. இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.
இது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள்? மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள்? இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்?
ஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும்? இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள்? இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம்?
இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.
siddhannavasal_5
இது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள்.
siddhannavasal_6
ஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.
இந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ஓம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியம்.

siddhannavasal_7
. இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும்? இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.
siddhannavasal_8

ஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா?’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.

siddhannavasal_9
இப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும்.

எதிலும் மெத்தனமாக இருக்கும் நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.