முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Sunday, November 18, 2018

காவிரி ஆறு


காவிரி ஆறு
………………
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகுஹாசன்மைசூர்மாண்டியாபெங்களூர் ரூரல்சாம்ராஜ் நகர்மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரிசேலம்ஈரோடுநாமக்கல்கரூர்திருச்சி , தஞ்சாவூர்நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது

துணை ஆறுகள்

கபினிஹேமாவதிஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சாசொர்ணவதி ஆகியவை கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள்பவானிஅமராவதிநொய்யல் ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்

அணைகள்

மேட்டூர் அணைகிருஷ்ணராஜ சாகர் அணைகல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அருவிகள்[

கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
வடிநிலப் பரப்பு
துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி.
காவிரித் தடம்
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ககனசுக்கி அருவியில்தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி
மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.
மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ.
அகண்ட காவிரி
மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பெயர்தந்த அந்த இரு நீரோடைகளில் ஒன்று காவிரி, மற்றது காளிங்கராயன் வாய்க்கால்.
பிறகு, கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது.
கொள்ளிடம்
முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் ஆகிறது. வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர்.
காவிரிக்குக் கொள்ளிடம் வடிகால் என்பதுபோல் காவிரிக் கழிமுகத்தில் பாயும் முதன்மையான எல்லா ஆறுகளுக்கும் வடிகால் ஆறுகள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நீர்ப்பாசன வாய்க்கால்போலவே வடிகால் வாய்க்காலும் இருப்பது பழந் தமிழரின் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று.
கல்லணை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை.
நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்.
நெற்களஞ்சியம்
கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி.
காவிரியின் பயன்கள்
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு.
தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம்.
ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதி.
உடன்படிக்கைகள்-1892,1924
1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு - கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது.
1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.
ஆயக்கட்டு அங்கும் இங்கும்
1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்.
உச்ச நீதிமன்ற வழக்கு
1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது.
இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.
1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.
தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.
உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது.
கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
காவிரி ஆணையம்
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்.
1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.
இறுதித் தீர்ப்பு
2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான்.
கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவிக்கிறது தமிழகம்.
தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன.
இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.
ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நிற்கிறது.
மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது. அப்போதும் இப்போது 2016லும் இதே சிக்கல்தான்.
அரசமைப்புச் சட்டப்படியான தீர்வு
இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.
இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்.


காவிரி ஆற்றின் வழியாக ஆண்டாண்டு காலமாக கர்நாடகதமிழக மக்கள் பலன் பெற்று வருகின்றனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கல்லனை என்ற தடுப்பணை கட்டினான். வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.
பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல்தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ்நிலமான தமிழகம் செழித்தது. (நூல்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் - தமிழ்ப்பல்கலைக் கழகம்)
சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
1911
செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.
1968 –
ஆம் ஆண்டு காவிரி ஆற்றின் மேல் ஹேமாவதி அணை கட்ட தமிழகத்தை கேட்காமல் கர்நாடகம் முடிவெடுத்த போது நடுவர்மன்றம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு தாக்கல் செய்தது.
1974 -
இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.
மீண்டும் தமிழக அரசு நடுவர் மன்றத்தை அமைகக்கக் கோரி 29.05.75-ல் வலியுறுத்தியது. 1989 இல் தமிழக அனைத்துக் கட்சி தீர்மானம்! 1990 ல் மீண்டும் தமிழக சட்டப்பேரவை தீர்மானம்!
4.5.1990 -
இல் நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி இரு மாநிலங்களுக்கு இடையிலான ஆறு என்பதை ஏற்றுக்கொண்டுதான் காவிரி நடுவர் மன்றமே 1990 ஜூன் 2-ம் தேதி அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடுவர்மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் அளித்தது. தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன.
1991
ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் நன்செய், புன்செய் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
ஹேமாவதி(1979), ஹேரங்கி(1970), கபினி (1974) ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை. மத்திய அரசின் தமிழக அரசின் முன் இசைவையோ, கர்நாடகம் பெறவில்லை. ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி(1956), அமராவதி (1957) போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.
காவிரி நடுவர் நீதிமன்றத்தி இறுதித்தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது தமிழ்நாட்டிற்குரிய பங்கு - 419 டி.எம்.சி. மத்திய அரசு அதன் அதிகாரபூர்வ இதழில் (கெசட்) வெளியிடவே மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்து உச்சநீதிமன்றத்தின் இறுதிக் கெடு விதித்து 6 ஆண்டுகள் கழித்து, பிப்ரவரி 19 ஆம் தேதி 2013 இல் மத்திய அரசு வெளியிட்டது. கெசட்டில் வெளியான நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். இன்று வரை காவிரி மட்டும் வரவில்லை.
இப்போது 2016 செப்டம்பர் 20 இல் மத்திய அரசு காவிரி மேலாண்மைக் குழுவை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசியாக இப்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றே கூறுகிறது கர்நாடகம்.
காவிரியின் மூலம் தமிழகம் பெறும் பலன்கள்
தமிழகத்தில் காவிரி நீரை நம்பி 12 மாவட்டங்களில் 26 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர், வேலூர், ராமநாதபுரம், சென்னை மாநகரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.

நீர் பங்கீடு

காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.
·         கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
·         தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
·         கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ


இறுதியாக

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.